செவ்வாய், மே 24, 2011

ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்






கதைகதையாய் சொல்லத் தெரிந்தவள்

கதைகதையாய் சொல்லத்
தெரிந்தவளிடம்
இப்படியானதொரு துயரம்
நிகழ்ந்ததில்லை.
அலைகளை ரசித்த குழந்தையின்
கண்களில்
ஒளிவற்றிப் போன இருட்டு.
கொண்டுவந்து சேர்த்த
குதூகலங்கள்
பொட்டித் தெறித்து
விம்முகின்றன.
ஓயாமல் வீசிக்
கொண்டிருக்கும் கடற்காற்றில்
இதயம் நொறுங்கிச் செத்த
வேதனையின் வேறொரு வாசனை.
இரவுகளில் கைப் பிடித்துச்
செல்லும்
கட்டுமரங்களின் சிதிலங்களில்
நேற்றைய கனவுகளின் மிச்சம்
தங்கியிருந்தது.
உயிர்களின் வரைபடமொன்று
மரணத்தின் சுவடுகளை
அழிக்கமுடியாமல்
தன்னையே மாய்த்துக்
கொள்கிறது.
கடற்புறத்தின் கண்ணீர்
மெளனங்களை
எழுதும் மொழி தெரியாமல்
நடுங்குகின்றன விரல்களின்
நுனி.
மனம் சொல்ல நினைப்பதை
வார்த்தை சொல்ல மறுக்கிறது.
ஆயுதங்களால் அழிக்கப்பட்டவை
அநேகம்.
குவிந்து கிடக்கும் சடலங்களை
கொத்தித் தின்னப் பறக்கும்
பருந்துகளுடன்
வெற்றிடம் எங்கும் விரிகிறது.
விடிந்தும் பொழுது இருள்
சூழ்ந்தே
விடிகிறது இப்போதெல்லாம்.



ஒரு மாயவானம்

அலையடித்துக் கொண்டிருக்கிறது
ஓய்ந்தபாடில்லை
கரும்பாறையாய் இறுகி உட்கார்ந்து
அலைகளை சிதறடிக்க விருப்பம்.
தெரியாத திசைகளிலிருந்தும் புறப்பட்டு
நெருங்கிமுத்தமிடும் காற்றில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது ஈரம்.
மேகம் தொட்டுரச எண்ணும்
வேளிமலைக் காற்றின் வருடல்
கடலும் காயலும் அலைபுரண்டு
விட்டு விலகி
வெற்றிடமாகும் பொழிக்கரை.
தோள் சுமக்கும் பல்லக்குகளை
வீசி எறிந்துவிட்டு
புறாக்களோடும் கிளிகளோடும்
பேசத் தொடரும் தேடல்
உடலை சுமக்கமுடியாமல்
நழுவி ஓடி விடுகிறது உயிர்
மழையாகவோ நதியாகவோ
அருவி மாலையாகவோ
பிரபஞ்சம் முழுதும் உருகி வழிய
ஒருமாயவனத்தின் வரிகளுக்குள் கடல்.
கரித்துண்டால் குறித்துவைத்த
தோற்றம் மறைவின் குறிப்புகள்
தோற்றம் மறைவுக் குறிப்புகளிலிருந்து
அலைபுரளும் எழுத்துக்கள்விடுபடா வரலாற்றின் சுவடுகளை
வரைந்து தீர்க்கின்றன.
ஆதித் தமிழனின்
உடல்மனம் சேர்ந்ததொரு கலவையில்
நூற்றாண்டுகள் தம்மைக் கரைத்து விட்டன.
ஆயுதம் தரித்த கடவுள்களாக
எங்கும் குழந்தைகள்
தொப்பூள்கொடி அறுபட்ட
பிறப்பில் ஒலித்த குரல்
அழுகையென கற்பிதம் செய்யப்பட்டது.
பிரபஞ்சத்தை
சின்னஞ்சிறு கண்களால்தரிசித்த
ஆனந்ததின் கூக்குரல் அது.
அதிகாரத்தைப் புறக்கணித்து
தனிமையைச் சூடிய பெருங்கனவொன்று
வவ்வாலாகி தலைகீழாய் தொங்குகிறது.
மரணத்திற்காகவே பிறப்பென்ற
குறுக்கப்பட்ட வாசகத்தை சுமந்து கொண்டு
எதிரே உட்கார்ந்திருந்தான் புத்தன்.
அவன் வீற்றிருந்த போதி மரத்தடி
பீரங்கியாய் உருமாறியிருந்தது.
அவன் விடும் மூச்சிலிருந்து
எறிகுண்டுகள்புறப்பட்டன.
யுத்தம்..மரணம்..கச்சாமி…

மரணச் சமாதியின் குருவி


கிணற்றுநீரில் மிதந்த நிலவை
கைதூக்கிவிட யாருமில்லை.
இருளில் மூழ்கியது நிலவு.
வெளியேற்றப்பட்ட நட்சத்திரங்கள்
பொடிப் பொடியாய் பொடிந்து
அந்தரத்தில் நொறுங்கிக் கொண்டிருக்க
எல்லாதிசைகளிலும் உதிக்கும்
அபூர்வதருணத்தை எதிர்நோக்கி
மெளனமாய் காத்திருந்தது வானம்.
செடிகளில் பூத்த பிச்சிகள்தோறும்
உட்கார்ந்திருந்த பனித்துளிகளில்
கண்ணீர்துளியும்
அழுகைதுளியும்
ரத்தத் துளியும்
மாறி மாறி உருக்கொள்ள
துளிகளில் உருண்டோடும் காலம்.
கொம்புமுளைத்த ராட்சச பூதங்கள்
ஒவ்வொன்றாய் உருமாறி எழுகின்றன.
எங்கும் பிணக்காடு
வனங்களிலும்
பதுங்குக் குழிகளிலும்
வெடிச் சிதறல்களில் முகமிழந்த
கூடிழந்த சின்னஞ்சிறு புறாக்களின்
அம்மாக்களை காணவில்லை.
விடுதலையை மீட்கமுயன்று
தோற்றுப் போகாமல்
பிணமாகிப் போனவர்களின்
உயிர்த்தெழுதல் குறித்து யோசிக்கிறது
மரணச் சமாதியின் குருவி.