வெள்ளி, நவம்பர் 04, 2011

கனவுப்பயணம் - கணேஷின் கவிதை


கணேஷ்

மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்தேன்.
பாதையை மறைத்துநின்றது பெருங்கல்.
மூச்சிரைக்க, எல்லாபலத்தையும் உபயோகித்து ஒருவாறு, கல்லை ஓரப்படுத்தினேன்.
கல்லைத்தள்ளி விட்டு பார்த்தால், சில அடிதூரத்தில் ஆளுயரக்குன்று!
ஏறிப்போகலாமென்றால் குன்று முழுதும் படுத்திருக்கும் விஷ நாகங்கள்.
வந்த பாதையிலேயே திரும்பிப்போகலாம் என்ற நினைப்பில் திரும்பினால்,
வந்திருந்த பாதையில் முள்செடிகள் முளைத்திருந்தன.
காலின் செருப்பு எங்கே போயின? இப்போது காணோம்!
வலப்புறம் கிடைத்த சிறு நிழலில் சில நிமிட இளைப்பாரலுக்குப்பிறகு, குன்றை திரும்ப நோக்கினால்,
பாம்புகள், வெண்மை திரவமாய் உருகியிருந்தன.
குன்றில் வழுக்கும் திரவத்தை பொருட்படுத்தாமல் ஏறினேன்.
குன்றின் உயரத்தில் ஏறி நோக்கினால்
ஆரம்பித்த இடத்திற்கே வந்தது தெரிந்தது.
கிளம்பிய இடமே இலக்கு என்றால்
பாதை, முற்கள், செருப்பு, நிழல்,
குன்று, பாம்புகள், திரவம்,
இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்?
படுக்கையில் படுத்தேன்
பார்த்தவற்றுக்கேல்லாம் பொருள் தேடவேண்டும்
என்பது மட்டுமல்ல,
பொருட்களே நினைவில் இருக்கவில்லை.
உறக்கத்தின் பிடியில் நினைவுகள் கரையத்தொடங்கி,
முடிவில், என்னில் ஒன்றும் மிச்சமில்லாதவனாய் நானும் கரைந்துபோனேன்.