வெள்ளி, மார்ச் 30, 2012

இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

ஊழியம் & கம்பெனி (பி) லிமிடெட்

நீங்கள் ஒரு ஓவியர் என்பதை நன்கு அறிவோம் அதனாலேயே
சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணியை
வழங்கியிருக்கிறோம் உங்களுக்கு
அந்த இசைக் கலைஞரைப் பாருங்கள்
எவ்வளவு அமைதியாக மணியடித்துக் கொண்டிருக்கிறார்
ஏன் இப்படி உங்கள் கண்கள் கலங்கியிருக்கின்றன
நீங்கள் பயன்படுத்த வேண்டிய 
சுண்ணமும் மட்டையும் காத்துக்கொண்டிருக்கின்றன
இப்போதே பணியைத் துவக்குங்கள்
இன்னும் சில தினங்களில் நமது ஆண்டு விழாவில்
கலந்து கொள்ள கடவுள் வர உள்ளார்
அதற்குள்ளாக அனைத்தும் தயாராக வேண்டும்
அதென்ன தூரிகையா
பணியிடத்திற்கு அதோடெல்லாம் வராதீர்கள்
நமது நிறுவனத்தின் விதிகளை அறிவீர்கள் தானே
பணிநேரத்தில் செல்பேசியை உபயோகிக்காதீர்கள்
சரி சீக்கிரம் வேலையைத் துவங்குங்கள்
கடவுளின் அதிகாரிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்
பணிகளை மேறபார்வையிட.


முல்லா

கடிகாரங்களை விற்பதற்காக பாக்தாத்தின் கடைத்தெருக்களில்
நாள் முழுதும் சுற்றிக் கொண்டிருந்த முல்லா வீடு திரும்பிக் கொண்டிருந்தார் தன் ஒட்டகத்தில். எதிர்காலத்திற்குள் நுழையவே தெரியாத அந்தக் கடிகாரங்களை யாருமே வாங்கவே இல்லை வழக்கம் போல். சென்ற முறை பழங்களை மட்டுமே நறுக்கும கத்திகளைக் கொண்டு வந்த போதும் இப்படித்தான் நடந்தது. தாகத்தில் நா உலர பாலைவனத்தை அவர் கடந்து கொண்டிருந்தபோது மாறுவேடத்தில் அங்கு வந்த கடவுள் அவரை யாரெனக் கேட்டார். என் பெயர் முல்லா நஸ்ருதின் வாங்குவதற்கு யாரும் வராத பொருட்களைத் தயாரிப்பதில் மட்டுமே தேர்ச்சி பெற்றவன் என, புன்னகையோடு அவரின் கரங்களைப்பற்ற கடவுள் முனைந்தபோது, இந்தக் கரங்களை நான் பார்த்திருக்கிறேன் என்றார் முல்லா. எப்படியெனக் கடவுள் புருவமுயர்த்த, நான் நடந்து செல்லும் போது என் கால்களுக்கடியில் முள் வைத்துக்கொண்டே போகும் கரங்களை நன்கறிவேன் என்றார்.