புதன், மார்ச் 19, 2014

கணேஷ் கவிதைகள்

வறட்சி நீங்குதல்

மண்டியிட்டு
திட்டில் தலை வைத்து
பார்க்கையில்
ஆழத்தில் போய்விட்ட நீர் மட்டம்
ஈரமிலா தொண்டையில்
சொற்களின் உற்பத்தி முடக்கம்.
வறண்ட கோடைக்கு நடுவே
பெய்த சிறு தூறலின்
ஒற்றைத் துளி
நாக்கை நனைத்தவுடன்
பெருகிய
வெள்ளத்தில்
கிணறு பொங்கி வழிந்தது.

முண்டங்களின் தலைவன்

தலைகளில்லா
முண்டங்கள்
ஒரு படை அமைத்தன
தலைவன்
ஒருவனை நியமிக்க
தலை தேடும் பணியில் இறங்கின
கிடைக்காமல் போன
தலைக்கு பதிலாய்
தலையின் சித்திரம் வரைந்த
பலகையொன்றை
எடுத்து
ஒரு முண்டத்தின் மேல்
ஒட்டி வைத்தவுடன்
அதன் உயரம் பன்மடங்காகி
எடை பல்கிப் பெருகி
அதன் காலடி நிழலின்
சிறு பகுதிக்குள்
மற்ற முண்டங்களெல்லாம் அடங்கின

தொலைந்த சத்தம்

செருப்படி சத்தம்
காதைக் கிழித்தது
பொறுக்கவியலாமல்
சத்தம் நின்றதும்
வாசல் வெளியே
ஒரு ஜோடி செருப்பு
பாதங்கள் எங்கேயென
திசையெல்லாம் அலைகையில்
செருப்படி சத்தத்தின் மாறாத ஞாபகம்
திரும்பவும் அறையில் அடைந்தேன்
செருப்படி சத்தம்
மீண்டுமொருமுறை கேட்குமெனும் நம்பிக்கையில்