செவ்வாய், ஜூலை 20, 2010

புள்ளக்கூடு


அனார் கவிதை


கலெண்டரில் இலக்கங்கள்...
வித விதமான அசைவுடன் சுற்றுகின்றன
மேல் கீழாக...  வட்டமாக...


கறுப்பு வண்டுகள் வரிசையாகத் திரும்பி
மடியில்...  கையில்...
தலைமுடியில்... காதுகளில்...
தோழில் ஒன்று... வயிற்றில் ஒன்றாக... இறங்குகின்றன
உடம்பு சிலிர்த்து உதறிக் கொள்கிறது


நினைவின் கொடுக்கினால்
புண்ணைத் துளைத்து வண்டுகள் ஏறுகின்றன
இரைச்சல்... அருவருப்பு... தொந்தரவு...


பப்பாசிக்காய்... முருங்கைக்காய்...
பலா... அன்னாசி... எள்ளு எனத் தின்றதும்
பலமுறை மாடிப்படிகளில் ஏறியதும்
இறங்கித் துள்ளியதும் போக...
கடைசியாக ஆறு மாத்திரைகள் மூன்று நாட்களுக்கு


எல்லாம் முடிந்துவிட்டது வெற்றிகரமாக


கதவு மூலைக்குள் உள்ளது... அப்படியே  குளவிக்கூடு


குளவி வட்டமாகக் கூடு கட்டினால் பெண் குழந்தை
நீளமாக பூரானின் வடிவில்
அடுக்கி அடுக்கிக் கட்டினால் ஆண் குழந்தை




 ஜுன் 2010


 புள்ளக்கூடு : (பிள்ளைக்கூடு ) கிழக்கிலங்கையின் கல்முனை பிரதேச முஸ்லீம் வீடுகளில் குளவி கூடு கட்டியிருந்தால்... அதே வீட்டில் அல்லது அயலில்... பெண் கருத்தரித்திருக்கிறாள் என நம்புவது வழக்கமாக இருக்கிறது.