திங்கள், ஜனவரி 10, 2011

கேட்டாயோ வாய்திறந்து


கேள்வி - என்ன நடந்தது மாநாட்டில்..மிஹாத் எதிர்ப்பிலக்கியம் தொடர்பாக கட்டுரை வாசித்துள்ளாரே..
மற்றைய அரங்குகள் அல்லது நீங்கள் குறிப்பிடும் குழுக்கள் தொடர்பாக ஏற்பாட்டுக்குழு என்ன நிலையுடன் இருக்கிறார்கள்?
(ஷன்பர் ஏஆர். என்ற பெயரில் ''பெருவெளி'' செயற்பாட்டுக்குழுவில் ஒருவரான பர்ஸான்)

பதில் - ஏற்ப்பாட்டுக் குழுவினர் எழுத்துச் செயற்பாடு தொடர்பான விரிந்த பரப்புக்கள்வரை
புரிந்து கொண்டவர்கள் என கருதமுடியாது. அப்படி இருக்கவேண்டுமென்ற அவசியமும் இல்லை.
மிஹாத் மட்டுமல்ல சிராஜ் மஷூர் உட்பட இன்னுமொருவரின் பெயரும் நிகழ்ச்சி நிரலில்
இருந்ததைக் கண்டேன்.இவர்களின் அமர்வு நடைபெறும்போது நான் அங்கு இல்லை. அந்த மாநாட்டுக்கான எனது பயணம் அதில் கரைந்துவிடும் நோக்கம் கொண்டதல்ல.
எமது நிலைப்பாட்டை தெரிவிக்க இம்மாநாடு பெரிதும் பயன்பட்டது.
அதுபோல்இ பல பயன்பாடுகள் பலருக்கு இருக்க வாய்ப்புள்ளது.
புத்தகங்களை விற்றல்,அதிகமும் அறியப்படாத எழுத்தாளர் மற்றும் வேறு பரப்புகளில் இயங்குபவர்கள் போன்றோர் தம்மை வெளிக்காட்டிக்கொள்ளல், தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு வழமையான நிகழ்வுபோல ஒரு பெரிய நிகழ்வு, இப்படி பலவகைப் பயன்பாடுகளை சாத்தியப்படுத்தியிருக்கும் என்ற வகையில்
இந்த மாநாட்டின் முக்கியத்துவம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே.
மிஹாத்,சிராஜ் மஷூர் போன்றவர்களின் எதிர்ப்பிலக்கியம் தொடர்பான புரிதலும், முன்வைப்புகளும்
அங்கிரு ந்தவர்களுக்கு நல்லதோர் அனுபவமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இப்படி விளிம்பு நிலைக் கதையாடல்களை தனி அரங்காக அனுமதித்திராத இந்த மாநாட்டில்
முழு விருப்பத்தோடு அல்லது விமர்சனமின்றி கலந்துகொண்டிருப்பார்கள் என நான் நினைக்கவில்லை.