ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

விக்ரமாதித்யன் அவர்களின் கவிதை


கூண்டுப்புலிகள்

நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக்கூண்டு வாசத்துக்கு

பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்து இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்

சுற்றிச்சுற்றி வருவதும்
குற்றமே இல்லை

உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்

வித்தை காண்பித்தால் போதும்
சவிக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து

ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப்புலிகள்