புதன், மே 02, 2012

சென்ன கேசவர்


-ந.பெரியசாமி

பருவத்தில் பன்றியும் அழகுதான்
உரையாடலில் நகைப்பை சேர்த்தது
பவித்திரமான ஆடவனும்
பன்றி தலை பதிந்த யுவதியும் இருந்த
சிற்பம் பார்த்த கணம்
தகிக்கும் வெய்யலை விழுங்கி
மிளிர்ந்த சிற்பங்கள்
சூடு தாங்காத பாதங்களில் உருபெயர்ந்து
தத்தித் தத்தி நடைபயின்றன வளாகமெங்கும்
காட்டி பெருமைகொள்ள
அவசர அவசரமாக நிழல்படமாயினர்
கொக்கு நிறத்தவளோ
எதையும் விட்டுவிடாதிருக்க
கண்களை குளமாக்கி
அடுக்கியபடியிருந்தாள் சிற்பங்களை
தனியாத தாகத்தோடு
விழுங்கிய ரெக்கார்டர்களை
குரல் கம்ம துப்பியபடி கைடுகள்
மிடறு விழுங்கிய எச்சில்கள்
ஸ்கலிதமாய் பிசுபிசுத்து
ஏக்கத்தோடு திரிந்தனர் யுவன்கள்
யாரும் தீண்டாத மூலையில்
கழிவை மிதக்கவிட்ட குளத்தினுள்
முத்தமிட்டபடி இருந்தன ஆமைகள்
சென்னகேசவன் படியமர்ந்து பார்த்தபடியிருந்தார்.