திங்கள், ஜனவரி 03, 2011

இலங்கை முஸ்லிம்கள் தனியான தேசிய இனம்! குறுந்தேசிய இனவாதிகளைத் தவிர அதில் யாருக்கு சந்தேகம்?


இந்தக் கட்டுரை எழுதப்படுவதன் நோக்கம் 'தேசம் நெற்' இதழில் எஸ்.ஆர் நிஸ்தார் முகம்மட் எழுதிய சோனகர் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர்.... என்ற கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட கணிசமானவர்களின் பின்னால் உள்ள காட்டமான முஸ்லிம் இன விரோதம், காழ்ப்புணர்வு கிளர்த்திய அரசியல் தூண்டல்தான் என்பது இங்கு சொல்லப்பட வேண்டிய விடயமாகிறது என்பதை இதனை வாசிப்போர் கவனத்தில் கொள்ளுமாறு கேட்கிறேன். (தேவைப்படின் அக்கட்டுரைக்கு பதிவிடப்பட்ட பின்னூட்டங்களை முதலில் வாசிக்குமாறும் தமிழ் முஸ்லிம் சகோதர சகோதரிகளை வேண்டியும் கொள்கிறேன்.)




 அபு நிதால்

இந்தக் கட்டுரை எழுதப்படுவதன் நோக்கம் 'தேசம் நெற்' இதழில் எஸ்.ஆர் நிஸ்தார் முகம்மட் எழுதிய சோனகர் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர்.... என்ற கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட கணிசமானவர்களின் பின்னால் உள்ள காட்டமான முஸ்லிம் இன விரோதம், காழ்ப்புணர்வு கிளர்த்திய அரசியல் தூண்டல்தான் என்பது இங்கு சொல்லப்பட வேண்டிய விடயமாகிறது என்பதை இதனை வாசிப்போர் கவனத்தில் கொள்ளுமாறு கேட்கிறேன். (தேவைப்படின் அக்கட்டுரைக்கு பதிவிடப்பட்ட பின்னூட்டங்களை முதலில் வாசிக்குமாறும் தமிழ் முஸ்லிம் சகோதர சகோதரிகளை வேண்டியும் கொள்கிறேன்.)

இனி நேரடியாக விசயத்திற்கு வருகிறேன். முஸ்லிம்கள் (இலங்கை சோனகர்) தனியான ஒரு தேசிய இனம் இல்லை என நிறுவ எடுக்கப்படுகின்ற முயற்சிகள், அரசியல் பிரச்சாரங்கள், காட்டப்படுகின்ற முன் உதாரணங்கள், கட்டவிழ்த்துவிடுகின்ற காழ்புணர்வுகள் இன்று நேற்றல்ல, இலங்கையின் அரசியல் சமூக வரலாற்றில் பல தசாப்தங்களாய் தொடர்கின்;ற போக்கு ஒரு சாராரால் தொடர்ந்தும் வாழையடி வாழையாக கைக்கொள்ளப்பட்டு வருகிறது என்பதுதான். இந்த அரசியல் சமூக சிறுபிள்ளைத்தனங்களும் கடைந்தெடுத்த ஆதிக்க  இனவாத சிந்தனைப் போக்கும் எமக்கு ஆச்சரிய மூட்டுவதல்ல, வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறது அவ்வளவுதான்.

காலத்திற்கு காலம், இப்போது நிஸ்தார் முகம்மட் அவர்கள் (தேசம் நெற் கருதுவதால் சோனகர் இனம் பற்றி மீண்டும் பேச வேண்டியுள்ளதாக) எழுதப் போய் முன் வருகின்ற இந்த மறுத்துரைப்புக்குறித்தும் தேசம் நெற் கருதுகின்ற விவாதம் குறித்தும் தேசம் நெற் ஆசிரியர் குழு பொறுப்புடன் பதில் கூறவேண்டியதும் இந்த விவாதத்தை ஆரோக்கியமான வழியில் முன்னகர்த்த வேண்டியதும் ஆசிரியர் குழுவின் பொறுப்புமாகும்.

விவாதம், உரையாடல் என்று வருகின்றபோது முன்வைக்கப்படும் கருத்துக்கள், சொல்லாடல்கள், கடந்த காலங்களில் இவை தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரபூர்வமான நிகழ்வுகளுடன் சமகால யதார்த்தங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. ஒரு சாரார் ஒரு தேசிய இனத்தை தமது அரசியல் சமூக குறுகிய நலன்களுக்காக, எதிர் நிலை கொண்டு மறுத்துரைக்கின்ற போது, அத்தேசிய இனம் தனது தேசிய இன, அடையாளத் தனித்துவத்தை இழந்து விடும் என நினைப்பது உரலை நினைத்துக்கொண்டு அவலை இடிக்கும் கதைதான். இது இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, உலகின் எந்த தேசிய இனத்திற்கும் பொருந்தக் கூடியதே. இலங்கை முஸ்லிம்கள் தம்மை எதுவாக அடையாளப்படுத்த விரும்புகிறார்களோ, அதுவாக அவர்களை அங்கீகரிப்பதுதான், தேசிய இன விடுதலையை, இனங்களின் தனித்துவத்தை, அம் மக்களின் அபிலாசையை மதிப்பவர்களின் கடமையுடன் கூடிய அரசியல் நேர்மையுமாகும்.

நான் இங்கு நிஸ்தார் தொட்டுள்ள தொன்ம வரலாற்று ஆய்வுகளுக்கு செல்லப்போவதில்லை. இலங்கையின் சுதந்திர கால கட்டத்திற்கு கிட்டிய 1930களில் இருந்தே இந்த விவகாரத்தை பேசுகிறேன். இலங்கையில் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என தம்மை நிறுவ ஒரு எண்பது வருட அரசியல் சமூக வரலாறும் அது கடந்து வந்த பாதையும்; பயணமும் போதுமானதொன்றே என நான் நினைக்கிறேன். சமகால வரலாறும் நமக்கு முன்னுள்ள கிட்டிய சாட்சியமாகும்.

தற்போது மேற் கிளம்பியுள்ள இந்த விவாதத்தின் போக்கை தீவிரமாக கையில் எடுத்திருப்பவர்கள் தீவிர தமிழ் குறுந்தேசிய வாதிளும் தமிழ் இனவாதிகளும் என்பது வெளிப்படையானது. இவர்களின் நிலைப்பாட்டின் பின்னால், இவர்களது சிந்தனை, மொழி, எழுத்தை தீர்மாணிப்பது இவர்களது தலைக்குள் இருக்கும் மேலாதிக்க தமிழ் குறுந்தேசிய வாதமே! இதனை நோக்கிய விமர்சனங்கள், அரசியல் கதையாடல்கள், மறுத்துரைப்புகள் நமக்கு முக்கியமாகப் படுவதால்தான் இந்த விடயம் பற்றி எழுதுவது பொருத்தமான சந்தர்ப்பமாகவும் உள்ளது.

இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். தமிழ்முற்போக்கு சக்திகள், நேர்மையான அரசியலாளர்கள், சமூக இனத்துவ ஆய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், தமிழ் தேசிய சக்திகளில் ஒரு பிரிவினர் நீண்ட காலமாகவே முஸ்லிம்கள் ஒரு தனித்த தேசிய இனம் என்பதை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து வந்திருக்கின்றனர். இந்த உண்மைக்காக அவர்கள் தமது சமூக  அகத்தினுள் பெரும் போராட்டத்தையே தமது எழுத்தால், கருத்தால் மேற் கொண்டு வந்திருக்கின்றனர்.

ஆகவே இந்த விடயம் தொடர்பாக நாம் தற்போது விவாதிக்க, உரையாட வேண்டிய பிரிவினராக தமிழ் சமூகத்திற்குள் எஞ்சியிருப்போர் தமிழ் குறுந்தேசிய இனவாதிகள் மட்டுமே ஆகும். இந்த தமிழ் குறுந்தேசியவாதிகளின் கருத்தியல், சிந்தனை, செயற்பாட்டு முறைமை என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானதல்ல. தமது சொந்த மக்களுக்கும் கூட எதிரானதுதான். தமது இன அகத்தினுள் இருக்கின்ற தலித்துகள், பொருளாதார ரீதியாக பின்தங்கியோர், யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான பிற பிரதேசங்களைச் சேர்ந்தோர் என பல்வகைப்படுத்த முடியும். அத்துடன் மலையக தமிழர், இலங்கை சிங்களவர் என நாம் அடையாளம் காணமுடியும்.

இந்த தமிழ் குறுந்தேசிய இனவாதத்தின் பின்புலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசியலின் காரணமாக இன்று தமிழ் இனம் பெற்ற விளைவை நாம் அதற்கு தலைமைதாங்கிய வழியாலும் அனுபவத்தாலும் கண்கூடாகக் காண்கிறோம். இந்த அரசியலின் மிகப்பெரும் சோகம் என்னவெனில் நியாயமான தமிழ் மக்களின் அரசியல் இன உரிமைக்கான போராட்டமும் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது என்பதுடன் தமிழ் இனம் மிக அதிகமான விலையையும் கொடுத்து பூஜ்ஜியமான கையறு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதே என்பதேயாகும்.

வரலாற்றின் தோல்விகளிலிருந்து தமது பலவீனங்களிலிருந்து, தமது சிந்தனைக் கோளாறுகளில் இருந்து பாடம் கற்காத இவர்கள், சுயவிமர்சனம் செய்ய முடியாத இவர்கள், ஒரு தேசிய இனத்தின் அரசியல் உரிமைக்காக அதன் அடையாள இருப்புக்காக போராடுவதாகச் சொல்லிக் கொண்டு ஏனைய தேசிய இனங்களின் தனித்துவங்களையும் அத்தேசிய இன மக்களின் அரசியல் அபிலாசைகளையும் மறுத்துரைப்பது, இவர்களின் கபடத்தனத்தை அம்பலமாக்கப் போதுமானதாகும். 

இந்த குறுந்தமிழ் தேசிய இனவாதிகளுக்கும் முஸ்லிம்களுக்குமான அரசியல் முரண்பாடுகள் தமிழ் குறுந் தேசியவாதிகள் கட்டமைக்கின்ற நிலம் இனம் அரசியல் அதிகாரம் சார்ந்த வடக்கு கிழக்கு பிரதேசத்தை தளமாகக் கொண்ட தனி ஈழம் என்பதிலிருந்தே தொடங்குகிறது. அவர்களால் நீண்ட காலமாய் முன்வைக்கப்படுகின்ற அகண்ட தமிழ் ஈழத்திற்குள் முஸ்லிம்கள் தம்மை உள்ளடக்க திணறி மறுத்தபோது, தம்மை தனியாக அடையாளப்படுத்த விரும்பிய போது தமது மேலாதிக்க குறுந் தமிழ் தேசியவாத அதிகாரக் கட்டமைப்பு கேள்விக்குட்படுத்தப்பட்ட போது முஸ்லிம் இன விரோதம் இவர்களால் தீவிரமாக்கப்பட்டதுடன், முஸ்லிம்கள் (சோனகர்) தனியான தேசிய இனம் இல்லை என்றும் அவர்கள் தமிழர்கள்தான் என நிறுவும் காலம்கடந்த அரசியல் நிறுவுதல்களும் முன்னுக்கு வந்தன, வருகின்றன. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படுகின்ற விவாதங்களில் ஒன்று மொழி தொடர்பானதாகும்.

முஸ்லிம்களும் தமிழைப் பேசுவதால் முஸ்லிம்கள் தமிழர்கள்தான் என்பதே இவர்களின் நீண்ட கால கதையாடலாகும். இக்கதையாடல் ஆறுமுக நாவலர் தொடங்கி இராமநாதன், அன்ரன் பாலசிங்கம் வரை தொடர்ந்து தற்போது தேசம் நெற்றில் பின்னூட்டமிடும்; சில நபர்கள் வரை தொடர்கிறது. ஒரே மொழியைப் பேசுகின்ற காரணத்தினால் அந்த மொழியைப் பேசுகின்ற எல்லோரும் ஒரே இனமாக இருக்க வேண்டும் என நிறுவும் போக்கு எந்த இனத்துவ ஆய்வுக்குட்பட்டதோ எனக்குத் தெரிய வில்லை. அத்துடன் தமிழ் நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் உதாரணங்களும் வேறு. (மொழி, இனம், தொடர்பான விவாதத்தை விரும்பினால் பிறிதொரு கட்டுரையில் பேசலாம்.)


முஸ்லிம்களின் தனித்த இன அடையாளமும் அரசியல் பிரதிநிதித்துவமும் 

1930களின் ஆரம்பத்தில் முதல் State Council உடை க்கான தேர்தல் பிரேரிக்கப்பட்ட போது முஸ்லிம்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கக்கூடாது என்றும் அவர்கள் தமிழர்கள்தான் என்றும் இராமநாதன் தனது ஆதிக்க கருத்தியலை தொடங்கி பிரித்தானியாவரை எடுத்துச் சென்றார். அக்கருத்தை அன்றே முஸ்லிம்கள் எதிர் கொண்டு, தாம் தமிழர்கள் அல்ல என்றும் தாம் தனித்துவமான இனமாக உள்ளதால் தமக்கான, (இலங்கை முஸ்லிம்களுக்கான) அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் எனவும் வாதிட்டனர்.

இறுதியில் ராமநாதன் மண்கவ்வ 1931 ஜூனில் நடந்த முதல் இலங்கை State Council உடை தேர்தலில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி தெரிவானார். இவர் கிழக்குமாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டதுடன் முதலாவது முஸ்லிம் இனத்துவத்திற்கான அரசியல் பிரதிநிதியாகவும் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1947ல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் 07 முஸ்லிம் இன பிரதிநிதித்துவம் பெறப்பட்டது. இதில் 04 பேர் கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டனர்.

1930 தொடங்கி இன்று வரை முஸ்லிம்கள் தமக்கான தனித்த இன பாரளுமன்ற பிரதிநிதித்துவத்தை அரசியல் ரீதியாகப் பெற்றுவருவதுடன்; தமக்கான தனித்த அரசியல் இயக்கங்கள், நிறுவனங்கள், அரசியல் தலைமைத்துவம் என்பவற்றை தன்னகத்தே கொண்டுள்ளனர். முஸ்லிம்கள் தம்மை ஒரு தேசிய இனமாக நிலைநிறுத்துவதில் கணிசமான அரசியல்; போராட்டங்களை நடாத்தி வந்துள்ளனர். (சிங்கள குறுந்தேசிய இனவாதிகளுடனும்தான்.)

இலங்கை முஸ்லிம் இனம் இலங்கை நாட்டிலிருந்து பிரிந்து போவதற்கான அரசியல் கோரிக்கைகளை எப்போதும் முன்வைத்ததில்லை. ஐக்கிய இலங்கைக்குள் சகல இன மக்களுடனும் சமத்துவமாகவும் சமாதானமாகவும் வாழ வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது.அவர்கள் தமிழைப் பேசினாலும் சிங்கள மொழியைப் பேசினாலும் இன அடிப்படையில் தமிழர்களாக இருந்ததுமில்லை சிங்களவர்களாக இருந்ததுமில்லை. அவர்களின் பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் இன வகைப்பாடு இலங்கை சோனகர் என்றே பதியப்பட்டு வந்திருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் தமக்கான தனித்த இன அடையாளம், தனித்த கலாச்சார சமூக விழுமியங்கள், தமிழ் கலந்த சோனக மொழி என்பவற்றைக் கொண்டுள்ளனர்.

முஸ்லிம் மக்களின் இன அடையாளத்திற்கான போராட்டத்திற்கு எந்த வெளிநாட்டு அரசுகளோ, வெளிநாட்டு நிறுவனங்களோ பின்புலமாக செயற்பட்டதில்லை. இலங்கை அரசு என்று வருகின்ற போது சர்வதேச நாடுகள் அதற்கு உதவின, தமிழர் போராட்டம் என்று வந்த போது இந்தியா, தமிழக மக்கள்;, சர்வதேச தேசம், புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழர்கள் உதவினர். ஆனால் முஸ்லிம்களின் இனத்துவ அரசியல் போராட்டத்திற்கு யாருமே கை கொடுக்காத போதும், இலங்கை முஸ்லிம்கள் அரசியல் துணிச்சலுடனும் மதியுகத்துடனும் தமது போராட்டத்தை முன்னெடுத்தே வந்திருக்கின்றனர்.


தமிழ் குறுந்தேசிய இனவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகளை தீரத்துடனும் துணிச்சலுடனும் முஸ்லிம் இனம் எதிர் கொண்டே வந்துள்ளது. இன அழிப்பு, இனச் சுத்திகரிப்பு, படுகொலைகள், அச்சுறுத்தலை எதிர் கொண்ட போதும் முஸ்லிம் இனம் தனது இனத்துவ அடையாளத்தை, நிலைநிறுத்தும் போராட்டத்தை கைவிடவில்லை. 

விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை தனித்த இனமாக அங்கீகரிக்க முடியாது என 1985 இல் இருந்து 2002 வரை சொல்லிவந்தனர். தமிழர்கள்தான் என்றார்கள், பின்பு இஸ்லாமியத் தமிழர் என்றார்கள். புலிகளின் இந்த நிலைப்பாட்டிற்கான பிரதான காரணம், ஈழத்தை ஒரு தேசிய இனத்தின் தாயகமாக காட்டுவதும், முஸ்லிம்களின் இன அடையாளத்தை மறுத்து அவர்களை அரசியல் ரீதியாக அடிமை கொள்வதுமேயாகும்.

வடபுலத்தில்; முஸ்லிம் சனத்தொகையை மிகக் குறுகியதாக இருந்ததால் 1990 ஒக்டோபரில் அங்கு பாரம்பரியமாகவும் வடக்கை தமது தாயகமாகவும் கொண்ட 75 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை இனச்சுத்திகரிப்புச் செய்து வெளியேற்ற முடிந்தது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் புலிகளால் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ள முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் தமது இன  அடையாளத்தை நிலைநிறுத்தி தமது இருப்பைப் பாதுகாத்துக் கொண்டதற்கான பலம் அவர்கள் கிழக்கில் அரசியல் ரீதியாக பலம் பெற்றிருந்ததுடன் கிழக்கு மாகாண மொத்த சனத்தொகையில் அண்ணளவாக 40 சதவீதமாக இருந்ததுமாகும்.

(1985க்கு பின் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் உட்பட தமிழ் ஆயுத இயக்கங்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த முரண்பாடுகளின் விளைவாக முஸ்லிம்களால் தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் சில தமிழ் கிராமங்களிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டும் உள்ளனர் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.)


The Sri Lanka population (1981 census)



The Sri Lanka population according to 1981 census, comprised Sinhalese 10,985,666, Sri Lanka Tamils 1,871,535, Sri Lanka Muslims 1,056,972, Indian Tamils 825,235, Malays 43,378, Burghers 38, 236 and others 28,981 Totaling 14,850,001. Of the total Muslim population of nearly 1,134,556 about 762,551 lived in the Sinhalese Speaking area and the balance 372,005 were living in the Tamil Speaking area – Eastern and Northern Provinces.

Because of ethnic conflict and security problems the government was unable to carry out a complete censes for the whole country after 1981. The 2009 population was estimated to be about 18,000,000. Sri Lanka Muslim population 10% is 1,800,000. Muslim Population in the Sinhalese Speaking area is about 1,200,000 and the Balance 600,000 live in the Tamil Speaking Areas – Eastern and Northern Provinces.


16 சதவீதமாகவுள்ள தமிழர்களின் அரசியல் குரல் தாங்கள்தான் என குறுந் தேசியவாத சிந்தனை கொண்டு மார் தட்டுகின்ற இந்த மேலாதிக்கவாதிகள் இலங்கையின் மொத்த சனத்தொகையில் அண்ணளவாக 10 சதவீதமாகவுள்ள முஸ்லிம்களின் இனத் தனித்துவத்தை மறுப்பது என்பது வேடிக்கையிலும் வேடிக்கையானதுடன் ஆதிக்க சிந்தனையும் கொண்டது.

இலங்கையின் மொத்த முஸ்லிம் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் கிழக்கில் வாழ்வதுடன் கிழக்கு மாகாணத்தில் அம்பாரை, திருமலை மாவட்டங்களில் பெரும்பான்மை இன மக்களாகவும் உள்ளனர் - (அம்பாரை, திருமலைமாவட்டங்களில் முஸ்லிம் இன பெரும்பான்மையை திட்டமிட்டு குறைக்க மாறிமாறி வரும் இலங்கை அரசுகள் செய்துள்ள, இன்றும் செய்து வருகின்ற விடயங்கள் பிறிதொரு இடத்தில் விரிவாக எழுதப்பட வேண்டியவை.)

ஆகவே கிழக்கு மாகாணத்தில் (வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்?;) முஸ்லிம்களின் இன அடையாளம் என்பது இந்த குறுந் தமிழ் தேசியவாதிகள் தூக்கித்திரிகின்ற கருத்தியலுக்கு எப்போதுமே சவாலாக இருந்து வந்திருப்பதுடன், குறுந்தேசிய தமிழ் இனவாதம், முஸ்லிம்களின் நியாயமான இன அடையாளத்தின் முன் வரலாற்றில் பல்வேறு தடவைகளில் தோல்வியும் கண்டுள்ளது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு அரசியல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென வலியுறுத்திவரும் முஸ்லிம்கள் அப்பேச்சுவார்த்தைகளில் தாம் ஒரு தனித்த தேசிய இனமாகையால் தமக்கான தனிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளனர். இந்த குரல் எழுப்பப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களின் இக் கோரிக்கையை இக் குறுந் தமிழ்த் தேசிய இனவாதிகள் நிராகரித்து வந்திருப்பதுடன் எள்ளி நகையாடியும் வந்துள்ளனர் - (தேசம் நெற்றில் வந்து கொண்டிருக்கின்ற பின்னூட்டங்கள் போல்.)

ஆனால் விடுதலைப்புலிகள், குறுந் தமிழ்த் தேசிய இனவாதிகளின் நிராகரிப்பையும் மீறி முஸ்லிம்கள் கடந்த 2002 அரசு புலிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் போது நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்த சாத்வீகமான அரசியல் போராட்டங்களினாலும் எழுச்சியினாலும், முஸ்லிம்கள் அரசியல் பேச்சுவார்த்தைக்கான மேசையில் தனித்தரப்பாக கலந்து கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டது.சர்வதேச சமூகத்தின் நெருக்குதலினால் விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையில் கிளிநொச்சியில் (13 ஏப்ரல் 2002) சந்திப்பு நடைபெற்றதுடன் மிக வேண்டா வெறுப்பாக நிர்ப்பந்தத்திற்கு மத்தியில்;;, குறுந்தேசிய தமிழ் இனவாத தலைமையான புலிகள் முஸ்லிம்களை தனியானதொரு இனமாக ஏற்றுக் கொள்ளும் பிரகடனத்தை ஏற்றனர்.

SLMC, LTTE sign agreement
[TamilNet, Saturday, 13 April 2002, 19:26 GMT]
(News Feature) Muslim leaders and the Liberation Tigers have signed an agreement to cooperate on affairs related to Sri Lanka's Muslim community, the head of the largest Muslim party told a press conference Saturday. Mr. Rauf Hakeem, leader of the Sri Lanka Muslim Congress (SLMC) and a delegation from his party flew to the LTTE-held town of Kilinochchi on Saturday morning for discussions with an LTTE delegation headed by the movement's leader, Mr. Vellupillai Pirapaharan








மே 18இல் முள்ளி வாய்க்காலில் இலங்கைப் படையினரிடம் வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்த புலித்தலைமை 2002 ஐ¬ன் மாதத்திலேயே (SLMC, LTTE agreement)அந்தப் பிரகடனத்தை மீறியதுடன் அதனை திரித்தும் கூறி யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த காலச் சூழலிலேயே இரண்டு முஸ்லிம்களை வாழைச்சேனையில் கடத்திச் சென்று படுகொலை செய்ததுடன் அவர்களது உடலை மீட்கச் சென்ற கண்காணிப்பு குழுவினர் பொதுமக்கள் பிரதிநிதிகள்; முன்நிலையிலேயே பெற்றோல் ஊற்றியும் எரித்தனர்.


இப்படியான குறுந்தேசிய தமிழ் இனவாதிகளிடம் முஸ்லிம்கள் எப்படி நீதி, நியாயம், சமத்துவத்தை எதிர்பார்ப்பது?. இக் குறுந் தமிழ் தேசிய வாதிகள் முஸ்லிம்களை மட்டுமல்ல எந்த உரிமை மறுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் அடையாளங்களையும் உரிமைகளையும் தனித்துவத்தையும் ஏற்க மாட்டார்கள் என்பதற்கு இவர்களால் கடந்த ஒரு நூற்றாண்டாக முன்னெடுக்கப்பட்டு வந்த அரசியல் வழி முறைகளில் ஏராளமான சாட்சியங்கள் ஆதாரங்கள் உண்டு.

இனியொரு இணையத்தளத்தில் வந்த இறுதியாக தோழர் தம்பையாவின் நேர்காணலில் அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துடன் எனது இந்தக் கட்டுரையை நிறுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறேன்! 


தோழர் இ.தம்பையா கடந்த 33 வருடங்களாக இலங்கையின் மாக்சிச-லெனினிச கட்சியான புதிய-ஜனநாயகக் கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றி வருவதுடன் 'புதியபூமி'இ 'நியூ டெமோகிரசி' ஆகிய வெ ளியீடுகளின் ஆசிரியராகவும் செயற்பட்டு வருகிறார்



இனியொரு : மலையகத் தமிழ் மக்களை தனியான தேசிய இனம் என்று கூறுவது பற்றியும் தமிழ் பேசும் மக்களின் ஒரு பகுதி என்று கூறுவது பற்றியும் என்ன கூறுகிறீர்கள்?

தோழர் இ.தம்பையா: இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் மலையகத்தமிழர்கள் ஆகிய நான்கு தேசிய இனங்களும் பறங்கியர் வேடர்கள் போன்ற பல சமூகங்களும் இருக்கின்றன என்பது எமது நிலைப்பாடு.
வரலாற்று ரீதியாக மலையகத் தமிழ் மக்கள் இலங்கைத் தமிழர்களுள் உள்வாங்கப்படுவதற்கு மாறான போக்குகளே இருந்து வந்துள்ளது. மலையகத் தமிழ் மக்களின் வரலாறுஇ வாழிடம்இ பண்பாடு என்பனவும் பிற்படுத்தப்பட்ட அவர்களின் நிலையும் தமிழர் சமூகத்திலிருந்து வேறுபட்டனவாகும். தேசிய இன அடையாளம் என்பது அடக்கு முறைகளை எதிர்கொண்டுஇ உரிமைகளை வென்றெடுக்க அரசியல் ரீதியாக பலமாக இருந்து முன்னெடுக்கப்பட வேண்டிய அடையாளமாகும். தமிழ் மக்களினதும் மலையக மக்களினதும் தேசிய அபிலாஷைகளும் ஒரே விதமான தீர்வுத் திட்டத்தால் உறுதி செய்யப்படக் கூடியதல்ல.
இதே போன்றுதான் முஸ்லிம் மக்களையும் நாம் பார்க்கிறோம். அவர்கள் தமிழ் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டங்கள் வேறானதாக இருக்கும்.
மலையகத்திலும் மலையகத்திற்கு வெளியிலும் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு மலையகத் தமிழ் தேசிய இனம் என்ற பரந்த அடையாளமே பாதுகாப்பான பலமான தேசிய இன அடையாளமாகும்.
ஒரு மக்கள் திரள் ஒரே மொழியை பேசுவதாலோஇ ஒரே சமயத்தைத் தழுவுவதாலோ ஒரே நாட்டில் வாழ்வதாலோ அம்மக்கள் திரளை ஒரே தேசிய இனமென்ற வரையறைக்குள் கொண்டுவர வேண்டுமென்பதில்லை.



  நன்றி-இனியொரு)