செவ்வாய், டிசம்பர் 18, 2012

மிகுதியை எங்கு வாசிக்கலாம் - 1

1
கண்களிலிருந்து துாரம் பரவிக்கொண்டிருக்கிறது.

2
கண்ணாடி என் குடும்பத்திலொருவர். எண்ணிக்கையை அதிகரிப்பதும் குறைப்பதும் எதிரே போய் நிற்பதைப் பொறுத்தது.

3
சொற்களுக்கிடையே இருப்பது என்றும் சந்தேகத்திற்கிடமான இடைவெளிதான். அது சொற்களை இணைப்பதுமில்லை. இணைய விடுவதுமில்லை.சொற்களை இழந்தால் அந்த இடைவெளியில் வசிக்கலாம்.

4
உட்கார வரும் காற்றை அனேக நேரங்களில் மரம் துரத்தியே விடுகிறது.

5
கோடுகள் உள்ள தாள்களிலே நான் எழுதுவது வழக்கம். இரண்டு கோடுகளுக்கிடையில் சொற்கள் நீந்த வசதியாக இருக்கும். சோர்வடையும் நேரங்களில் மனம்போய் கோடுகளில் குந்தி சொற்களை கொத்தி உண்ணவும் வசதியாக.

6
தாளின் நடுவே இன்னும் உட்கார்ந்திருக்கிறது அந்தப் புள்ளி.

7
துாரத்தில் வருவது மழைபோல் தெரிகிறது.
வீட்டுக்குள் சென்று ஜன்னலின் அருகே அமர்ந்து கொண்டேன். மழையை இப்படிப் பார்க்க நெடுநாளாக ஆசை. நெருங்கி வருகிறது.துாரத்தில் நின்றுவிட்டு திரும்பிப் போய்விட்டது.நிலவையாவது பார்க்கலாமென வெளியில் வருகிறேன். விடிய விடிய இரவுதான் வரவேற்றது.

8
கண்ணாடியினுள் நான் சிக்கிக் கொண்ட நேரம் பார்த்து அதை மகன் உடைத்துவிட்டான். துண்டுகளிலிருந்து வெளியெறி என்னை ஒட்டி முழுமையாக்க வெகு நேரமானது.

9
முதலாவது நட்சத்திரம் மீண்டும் வானுக்கு திரும்பிவரும். அப்போது அதுமட்டுமே இருக்கும் என்றார் அவர்.

10
வெங்காயத்தை உரித்தனர். கடைசியில் ஏதுமில்லாது போனதும் விடவில்லை. ஏதாவது இருக்குமென காத்திருந்தனர். காத்திருக்கத் தொடங்கினர். காத்துக்கொண்டே இருக்கின்றனர்.